அமெரிக்காவில் ஆசிய-அமெரிக்கர்களுக்கு எதிரான இனவாத ரீதியான வெறுப்புணர்வுச் செயற்பாடுகள் அதிகரித்துள்ள அதே நேரத்தில் கனடாவிலும் இதேபோன்ற வெறுப்புணர்வுகள் அதிகரித்து வருவதற்கான சான்றுகள் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கனேடிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த கனேடியர்கள் ஏனைய கனேடிய சமூகத்தினரால் இலக்குவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான சீன-கனேடிய தேசிய பேரவை உள்ளிட்ட குழுக்களால் கோவிட்19 காலப்பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் பதிவான இனவெறி ரீதியான செயற்பாடுகள் தொகுக்கப்பட்டுள்ளன.
2020 மார்ச் 10 முதல் 2021 பெப்ரவரி 28 வரை கனடாவில் 1,150 கனேடிய-ஆசியர்களுக்கு எதிரான வெறுப்புணா்வை வெளிப்படுத்தும் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் ரீதியான தாக்குதல்கள், வெறுப்பூட்டும் பேச்சுக்கள், காறித் துப்புதல் உள்ளிட்டவை இவ்வாறான வெறுப்புச் சம்பவங்களில் உள்ளடங்கியுள்ளன.
வான்கூவரில் கடந்த ஆண்டு 98 ஆசியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் ஆவணப்படுத்தியுள்ளனர். 2019 இல் இவ்வாறான 12 சம்பவங்களே பதிவாகின என சமூக நீதிக்கான சீன கனேடியதேசிய பேரவை தலைவர் ஆமி கோ தெரிவித்துள்ளார்.